வெள்ளி, 29 ஜூலை, 2011

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம் ?




பெண்களிடையே தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின்
எண்ணிக்கை தமிழகத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது. பிறந்த குழந்தைக்கு உணவாக மட்டுமின்றி, சிறந்த மருந்தாகவும் இருப்பது தாய்ப்பால்.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாது உப்புகள் அடங்கியிருப்பதால் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன. ஒரு தாயிடம் நாளொன்றுக்கு 100 மி.லி., முதல் 1.5 லிட்டர் வரை பால் உற்பத்தியாகிறது. உணவு விகிதத்துக்கு ஏற்ற கலவை அதில் இருக்கும்.

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்ற தவறான எண்ணம் பெரும்பாலான பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தால், கருப்பை பழைய நிலைக்கு திரும்பும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், 6 முதல் ஓராண்டு வரை தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோன்கள் குறைகிறதாம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவுஜீவிகளாக இருப்பதுடன், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.



தாய்ப்பாலின் அவசியம் குறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், குழந்த பிறந்த சில நாட்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த போக்கு இந்தியாவில் மட்டுமல்ல; உலகளவில் பேசக்கூடிய பிரச்னையாக உள்ளது. தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்து பல நாடுகளில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், நோயால் பாதிக்கப்பட்டவை, பிறக்கும் போதே தாயை இழந்த குழந்தைகளுக்காக தாய்ப்பால் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது.பழங்காலத்தில் குழந்தை பெறுவதும், அவற்றை வளர்ப்பதும் என குடும்ப பொறுப்புகளையே கண்கண்ட தெய்வமாக பெண்கள் கருதினர். ஆனால், இப்போது குடும்ப சுமைகளை பொறுத்து வேலைக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, அவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பது அரிதாகிறது. இவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் தாய்ப்பால் கொடுப்பதை முக்கிய பணியாக கருத வேண்டும்.

இதுபோன்ற பல காரணங்களால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பெற்றெடுக்கும் 2.6 கோடி பெண்களில் 2 கோடி பெண்கள் 6 மாத கால அளவுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கிறது. தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் படி 24.5 சதவீதத்தினர் மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கின்றனர். இது 90 சதவீதமாக உயர்ந்தால் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் குழந்தைகள் இறப்பது தடுக்கப்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தாய்ப்பால் விழிப்புணர்வால், தேசிய சராசரியை (24.5 சதவீதம்) விட இருமடங்கு உயர்ந்து 58.8 சதவீதமாக உள்ளது. இதுகுறித்து, குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன் கூறுகையில்,‘‘ தமிழகத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து டாக்டர்கள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையில் தான் அதிக குழந்தைகள் பிறக்கிறது. பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க கூறுகிறோம்.

குழந்தையின் வளர்ச்சி குறித்த அறிவுரையின் போது, 6 மாதத்துக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக சொல்லி அனுப்புகிறோம். அதையும் மீறி சில பெண்கள் தண்ணீர் கலந்த புட்டிபாலை கொடுக்கின்றனர். அதனால் குழந்தைகள் படும் அவஸ்தையை சுட்டிக்காட்டி தாய்ப்பாலின் அவசியத்தை புரிய வைக்கின்றனர். கிராமப்புற தாய்மார்களை சமூகநலத்துறையின் விழிப்புணர்வு வெகுவாக சென்றடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது‘‘ என்றார்.


30 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவை

தாய்ப்பால் கொடுக்க தவறும் பட்சத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இந்தியாவை பொறுத்தவரை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 48 சதவீதமும், தமிழகத்தில் 30.9 சதவீதத்தினரும் உள்ளனர். அதேபோல், எடை குறைவான குழந்தைகள் தேசிய அளவில் 42.5 சதவீமும், தமிழகத்தில் 29.8 சதவீதமும் உள்ளனர். இந்த தகவல் தேசிய குடும்ப சுகாதார சர்வேயில் தெரியவந்துள்ளது
தாய்க்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அடுத்து உருவாகும் குழந்தை பிறப்பை தள்ளி போடுகிறது. குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தால் ரத்தபோக்கு கட்டுப்படுத்தப்படும். இரண்டரை ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். சொல்லப்போனால் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மைகள் குறித்து, பல்வேறு கோணத்தில் ஆய்வுகள் நடந்து வருகிறது.

எய்ட்ஸ் பாதித்தவர்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்
எஸ்ட்ஸ் நோய் பாதித்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், அதன் மூலம் நநோய் பரவுமா என்ற கேள்விகுறி இருந்து வந்தது. அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், எஸ்ட்ஸ் பரவுவது தடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதாவது, தாய்ப்பால் கொடுக்கும் முன்புஅன்ட்டிரேட்ரோஹைல்என்ற மருந்தை உட்கொள்ள வேண்டும். இதை பின்பற்றி தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைகிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக