திங்கள், 28 மே, 2012

பழங்களின் சூப்பர் ஸ்டார் "கொய்யா"!





நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு பொது புத்தி உள்ளது. 

அவ்வளவு ஏன்...? உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் கூட,"ஏதாவது ஆப்பிள், ஆரஞ்சு வாங்கிச் செல்லலாமா?" என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற பழங்கள்தான் சிறந்தது என்ற எண்ணம் நம்மவர்களின் பொது புத்தியில் உறைந்துபோயுள்ளது. 

ஆனால் இதுமாதிரியான பிம்பத்தை அடித்து நொறுக்கி வீசியுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

அநேகம்பேர் அவ்வளவாக சீண்டாத மற்றும் ஏழைகளின் பழமாக கருதப்படுகிற கொய்யா பழம்தான், அதிக 'ஆண்டாக்ஸிடென்ட்'(உடலில் செல்களை புதுப்பிக்கும் திறன்)கொண்ட, பழங்களின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்வதாக தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் கிடைக்கும் பழங்களை வைத்துக்கொண்டு அண்மையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது. 

இமாச்சல் ஆப்பிள் மற்றும் மாதுளம்பழம்,தென்னிந்திய பகுதி வாழைப்பழம், மகாராஷ்ட்ரா திராட்சை மற்றும் இந்தியா முழுவதும் பரவலாக கிடைக்கக்கூடிய கொய்யா பழம் ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

இதில் மற்ற அனைத்து பழங்களுடன் ஒப்பிடுகையில், கொய்யாவில்தான் அதிக'ஆண்டாக்ஸிடென்ட்'இருப்பதாக தெரியவந்துள்ளது. 

மேலும் பிளம்ஸ் பழம்,இந்தியர்களால் மிகவும் விரும்பப்படும் மாம்பழம் மற்றும் சீதா பழம் ஆகிய பழங்களும் கூட கொய்யா பழத்திற்கு பின்னால்தான் நிற்கின்றன. 

அந்த அளவிற்கு கொய்யா பழத்தின் ராஜாங்கம் முன்னிலையில் இருக்கிறது.



100 
கிராம் கொய்யா பழத்தில் 500 மில்லி கிராம் அளவுக்கு ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளது. அதுவே பிளம்ஸ் பழத்தில் 330 மி.கி., மாதுளம்பழத்தில் 135 மி.கி., ஆப்பிள் பழத்தில் 125 மி.கி, வாழைப்பழத்தில் 30 மி.கி. அளவு மட்டுமே 'ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

அதேப்போன்று தர்பூசணி மற்றும் அன்னாசி பழத்திலும் மிகக்குறைந்த அளவே 'ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளது. அதேப்போன்று மாம்பழத்தில் 170 மி.கி. 'ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளது.

ஆனால் கொய்யாவில் அதிக அளவு 'ஆண்டாக்ஸிடென்ட்' மற்றும் நார்சத்து உள்ளது.

எனவே விலை மலிவாக இருக்கிறதே என்று கொய்யா பழத்தை அலட்சியப்படுத்தாமல் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு பழமாவது சாப்பிட்டு வரலாம் என்று கூறும் டாக்டர் ஸ்ரீராமுலு, "An apple a day keeps the doctor away" என்பதற்கு பதிலாக "A guava a day keeps the doctor away", அதாவது " தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்!" என்பதற்கு பதிலாக" தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்!" என்று புதுமொழி படைக்கலாம் என்கிறார்...! 

அதே சமயம் சளித் தொல்லைக்கு ஆளானவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் சிலருக்கு கொய்யா பழம் "அலர்ஜி" எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்களும் இதை தவிர்த்துவிட வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸ்!

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்




1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 

4.
நிறைய சர்க்கரை சாப்பிடுதல் 
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 

5. மாசு நிறைந்த காற்று 
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். 

6.தூக்கமின்மை 
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 

7.
தலையை மூடிக்கொண்டு தூங்குவது 
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது 
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது 
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 

10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.