வியாழன், 4 ஆகஸ்ட், 2011

தக்காளி பூண்டு குழம்பு


தேவையானப் பொருட்கள்:

தக்காளி - 3
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு பல் - 20 அல்லது 25
சாம்பார் வெங்காயம் - 10 அல்லது 15
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, புளித்தண்ணீரை தனியாக வைத்துக் கொள்ளவும்.

நான்கு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் தக்காளியைப் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும். ஆறியபின், வெந்த தக்காளியை எடுத்து தோலை உரித்து கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், சீரகம், வெந்தயம், பெருங்காயம் சேர்க்கவும். வெந்தயம் லேசாக சிவந்தவுடன், பூண்டை சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் சாம்பார் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். அதில் புளித்தண்ணீர், தக்காளி விழுது, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறி விடவும். குழம்பை மூடி கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அடுப்பை தணித்து, சிறு தீயில் வைத்து, குழம்பு சற்று கெட்டியானதும், இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக