திங்கள், 2 பிப்ரவரி, 2015

முப்பது வயதிலேயே முதுகுவலி!


புகைப்பிடிப்பவர்களுக்கு சவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகுவலி வரும். ஆல் கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு  நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக் கிறது. ஆரோக்கியத்தை இழந்து 30 வயதுக்குள்ளேயே மருத்துவமனைகளின் வரவேற்பறைகளில் காத்துக்  கொண்டிருக்கும் இளைஞர்கள் எக்கச்சக்கம்.

இந்த ஆரோக்கிய அச்சுறுத்தலில் முதுகுவலிக்கு முக்கிய இடம் உண்டு. உடல் உழைப்பு குறைந்ததும், கணினிக்கு முன்னால் நாள் முழுக்க அமர்ந்து இருக்கிற வேலைகளுமே முதுகுவலிக்கான காரணம் என மேலோட்டமாகப் புரிந்துகொள்ள முடியும்.

எலும்பு மற்றும் முடநீக்கு இயல் நிபுணர் சு.ரமேஷ் பாபு இது குறித்து விரிவாகப் கூறுகிறார்: கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப் பகுதி,  வால் பகுதி என்று நான்கு பகுதிகளாக முதுகைப் பிரிக்கலாம். இளைஞர்களிடம் பொதுவாக கழுத்து மற்றும் அடிமுதுகுப் பகுதிகளில்தான் வலிகள்  ஏற்படுகின்றன.

இந்த இரண்டு வகை முதுகுவலிகளும் உட்காரும் முறை, நடக்கும்முறை, அதிக உடல் எடை போன்ற பழக்க வழக்கங்களினாலேயே பெரும்பாலும்  ஏற்படுகின்றன. அரிதாக அலர்ஜி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நடுமுதுகுப் பகுதியிலும் வலி ஏற்படலாம்.


கழுத்து வலி ஏன் வருகிறது?

கழுத்துப் பகுதியில் மொத்தம் 7 எலும்புகள் இருக் கின்றன. இந்த எலும்புகளின் இருபுறமும் சவ்வுகளும் சின்னச் சின்ன இணைப்புகளும்  இருக்கின்றன. இதில், உடலுக்கு ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு முதுகெலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பதுதான் சவ்வுகளின்  வேலை. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு சவ்வில் அழுத்தம் ஏற்பட்டு கழுத்து வலி வரலாம்.

சவ்வில் அழுத்தம் அதிகமாவதால்  சவ்வு விலகி அருகில் இருக்கும் நரம்புகளைத் தொடும். இதனால் கைகளிலும் வலி ஏற்பட்டு மரத்துப் போவது, பலவீனமாக இருப்பது போன்ற  உணர்வு கைகளில் தோன்றும்.


தவிர்ப்பது எப்படி? 

படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது கூடாது. தூங்கும்போது மெலிதான தலை யணைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  ஒன்றுக்கும் அதிகமான தலையணைகள் பயன்படுத்தக் கூடாது. கழுத்துப் பகுதி, நடு முதுகுப் பகுதி, அடிமுதுகுப்பகுதி, வால் பகுதி என அந்தந்தப்  பகுதிகளுக்கு என தனிப்பட்ட பயிற்சிகள் இருக்கின்றன. மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு அதற்கான பயிற்சிகளைச் செய்யவேண்டும்.


அடிமுதுகுப் பகுதியில் வரும் வலி ஏன்? 

அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு அடிமுதுகுப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் சவ்வு தேய்மானம் அடைந்து இடம்மாறும்.  சவ்வில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அடிமுதுகுப் பகுதியில் வலி வரும். இந்த வலி அடிமுதுகிலிருந்து கால்களுக்கும் பரவும். நீண்ட நேரம் நிற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த அடிமுதுகுப் பகுதி வலி அதிகமாக  ஏற்படுகிறது. இரவு நேரப் பணி, எப்போதும் ஏசியின் பயன்பாடு போன்றவற்றால் வைட்டமின் டியை தரும் சூரிய ஒளி உடலில் படுவதில்லை.

எனவே, வைட்டமின் டி குறைபாடு இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியம் சத்தை உடல்  உள்வாங்கிக் கொள்வதும் குறையும். எலும்புக்கு ஆதாரமான இந்த இரண்டு சத்துகளும் குறைவதால் தசைகள் பலவீன மடைந்து அடிமுதுகில் வலி  ஏற்படும்.

நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் அடிமுதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததும் ஒரு  முக்கியக் காரணம். சமீபத்திய ஆய்வுகளில் புகைப்பிடிப்பவர்களுக்கு சவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகு வலி வருவதாகக்  கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நீண்ட தூரப் பயணங்களாக இருந்தால் ரயிலில் செல்வது சிறந்தது. பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தால், முன்பகுதி யிலேயே அமரவேண்டும்.  பின்பக்கம் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட தூரப் பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வேகத்தடைகளில்  நிதானமாகச் செல்வதும், பழு தடைந்த சாலைகளைத் தவிர்ப்பதும் நல்லது. சீக்கிரம் செல்லலாம் என்று குண்டும் குழியுமான குறுக்கு வழிகளைப்  பயன்படுத்துவது முதுகுவலியை வரவழைக்கும்.


முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதுகுவலி வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்று பரிசோதனைகள் செய்து பார்த்தால் என்ன பிரச்சினை  என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
நோய்த் தொற்று, ரத்த ஓட்டத்தில் தொந்தரவு, எலும்புத் தேய்மானம், அடிமுதுகுப் பகுதியில் அரிதாக  புற்று நோய்கூட வரலாம். அதனால், வலி ஏற்பட்டால் நாமே மருந்து எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக