வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பீன்ஸ் உசிலி


தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - 2" அளவிற்கு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது - ஒரு கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக (மசால் வடைக்கு அரைப்பது போல்) அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக