வெள்ளி, 30 செப்டம்பர், 2011

கர்ப்பத்தின் போது உறவு


பொதுவாக கர்ப்பத்தின் போது உடலுறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

பொதுவாக ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து அதில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதும், மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு உடலுறவு வேண்டாம் என்பதுதான்.

இது எல்லா மருத்துவர்களும் கூறுகிறார்களா என்பது சந்தேகமே, ஆனால் இதுதான் நடைமுறை.
 

முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
 
எனினும் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உடலுறவில் இன்பம் குறைந்தே காணப்படும். முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உடலுறவில் ஈடுபடலாம். அதில் தவறு ஏதும் இல்லை.

ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. மிகவும் வசதியான நிலையில் பெண் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது.

அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

மேலும், உடலுறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

அதற்காக கவலைப்பட வேண்டாம், உடலுறவுக்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்திருக்க வேண்டும். கூடுமானவரை காண்டம் எனப்படும் ஆணுறைப் பயன்படுத்தி உடலுறவுக் கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும்.

கர்ப்பிணின் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உடலுறவுக் கொள்ளலாம்.


8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.

எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உடலுறவு கொ‌ள்ள வேண்டும்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?




எது வெற்றி? எது தோல்வி?

முதலில் எது வெற்றி? எது தோல்வி? நினைத்ததை அடைந்தால் வெற்றி. அடைய முடியாவிட்டால் தோல்வி. முதலில் புரிந்துகொள்ள வேண்டியது “தோல்வி என்பது நாம் செய்த செயல்கள் சரியில்லை” என்பதை அறிவுறுத்த வந்த நிகழ்வு. இதில் நான் தோற்கவில்லை.

நான் செய்த செயல்கள் சரியில்லை என்பதுதான் நிகழ்வு. எனவே, நம் வாழ்க்கை அகராதியில், ‘நான் தோற்றுவிட்டேன்’ என்றசொல்லைத் தூக்கிக் கடலில் போட்டு விடுவோம்.
குழந்தை நடக்க முயற்சி செய்யும்பொழுது பலமுறை விழுந்து எழுந்துதான் நடக்கக் கற்றுக்கொள்கிறது. எந்தக் குழந்தையாவது ‘நான் நடக்க முயற்றிக்கும் பொழுது 50 முறை விழுந்து விட்டேன். எனவே நடப்பது எனக்கு ஒத்துவராத விஷயம்” என முடிவெடுத்திருக்கிறதா? ’50 முறை என்ன, 500 முறை விழுந்தாலும் எழுந்து நடந்தே தீருவேன்’ என்ற உற்சாகம் Motivation enthusiasm இருப்பதால் குழந்தை புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளது. தன்னுடைய 5 வயதிற்குள் குழந்தை கிட்டத்தட்ட 93 திறமைகளை வளர்த்துக்கொள்கிறது.
உடனே வெற்றி இல்லை

நாம் சைக்கிளோ, ஸ்கூட்டரோ, காரோ கற்றுக்கொண்ட பொழுது ஒரே முயற்சியில் கற்றுக்கொள்ளவில்லை. பலமுறைவிழுந்தும் அடிபட்டும் கற்றுக்கொண்டோம். இப்படி எந்தத் திறமையையும் ஒரே முயற்சியில் நாம் பெற்றதில்லை. ஆனால் தொழிலுக்கு வந்த பிறகு ‘தோல்வியே வரக் கூடாது’ என்று நினைக்கிறோம்.

நண்பர்களே! ஒரு ஊருக்குக் காரில் போனால் மேடு, பள்ளங்கள், மழை, புயல் டயர்பஞ்சர், கூட்ட நெரிசல் எனப் பல்வேறு தடைகள் வருகின்றன. இவற்றையெல்லாம் கடந்துதான் நாம் அந்த ஊருக்குச் சென்று சேருகிறோம்.
அதற்காக நாம் பயணத்தை ரத்து செய்து விடுவதில்லை. திரும்பி வந்துவிடுவதும் இல்லை. தடைகளைக் கடந்து அந்த இடத்தை அடைகிறோம்.

 அதுபோலத் தொழிலும் பிரச்சனைகள், சங்கடங்கள், போட்டிகள், நஷ்டங்கள், தோல்விகள், இழப்புகள் போன்றவை ஏற்படத் தான் செய்யும். தொழிலில் வெற்றிபெற அந்தத் தடைகளைக் கடந்துதான், தோல்விகளைச் சந்தித்துத்தான் செல்ல வேண்டி இருக்கிறது.

சாதனையாளர்கள்…

இந்த மனிதனை வாழ்க்கையில் சாதனையாளர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அவர்கள் நிறையத் தோல்விகளைச் சந்தித்து அவற்றை யெல்லாம் கடந்துதான் வெற்றியடைந்திருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் தோல்விகளால் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கி விடுகிறார்கள்.
இதனை வள்ளுவர்
“இடைக்கண் முறிந்தார் பலர்!” என்பார்.
வெற்றியார்கள், சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் அவர்கள் அடைந்த பலன்கள் – பயன்கள் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் பட்ட கஷ்டங்கள், தோல்விகள், தூக்கம் கெட்ட இரவுகள், அவமானங்கள், சிந்திய வியர்வை இவற்றைப் பற்றிச் சிறிதளவே சொல்லப்பட்டு இருக்கிறது.

எத்தனையோ வெற்றியாளர்களை நான் தனிப்பட்ட முறையில் பேட்டி கண்டபொழுது அவர்கள் சந்தித்த தோல்விகளும், கஷ்டங்களும், நஷ்டங்களும் ஏராளம், ஏராளம்.

பெரிய வெற்றி வேண்டுமானால்…
வெற்றியின் அளவு பெரியதாக இருக்க இருக்கப் போராட்டங்களும் பெரிதுதான். கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் அதிகம். அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுதும், அதனுள்ளே சுவர் எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுதும் வெளி உலகுக்குத் தெரியாது. அந்தச் சமயத்தில் வெளி உலகம் உங்களைக் கேலி செய்யலாம். அல்லது மதிக்காமல் இருக்கலாம். அவர்கள் பார்வையில் கட்டிடம் மேலே வந்தால்தான் வெற்றி என்று நினைப்பார்கள்.
ஆனால் நண்பர்களே! நீங்கள் இதுவரை சாதிக்காமல் இருந்தால், தோல்வியடைந்து கொண்டிருந்தால் ‘அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று அர்த்தம். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். இப் பொழுது நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர் கள். உங்களால் நிச்சயமாக உயர்ந்த கட்டித்தைக் கட்டமுடியும்.
ஒரு விவசாயி நெல் விதைத்தால் 3 மாதத்தில் அறுவடை செய்யலாம். ஆனால் மாமரம், தென்னைமரம் வைத்தால் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பலன் பல வருடங்கள் தொடர்ந்து கிடைக்கும். ஆகவே நீங்கள் பெரிய வெற்றியடையத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள்.
தோல்விக்குக் காரணங்களை ஆய்க

ஒவ்வொரு முறையும் மனிதர்கள் தோல்வியடையும்போது விஞ்ஞானப் பூர்வமாகக் காரண காரியங்களை ஆராய வேண்டும். தோல்விக்குக் காரணம் என்ன? எதில் குறை? என்ன குறை? என்பதைத் தீர்க்கமாகப் பார்க்க வேண்டும்.

அதாவது குறை-தொழில் அறிவிலா? அணுகுமுறையிலா? திறமையிலா? அல்லது எனக்கு வியாபார – விற்பனை உத்திகள் சரியாகத் தெரியவில்லையா? போட்டியா உலக நிலவரம் தெரியவில்லையா? தரமா? விலையா? வாடிக்கையாளர் சேவை போதவில்லையா? தொடர்ச்சியான வளர்ச்சி இல்லையா? கணக்குகளில் சரியில்லையா? தொழில் ஈடுபாடு அல்லது அக்கறையில்லையா? நன்கு கவனிக்கவில்லையா?
இப்படிப் பல கோணங்களில் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களிடமும் ஆலோசகர் களிடமும் ஆலோசனை பெற வேண்டும். குறை களைக் கண்டுபிடித்துச் சரி செய்து, மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.

நினைத்த வெற்றி- நினைத்த குறிக்கோளை அடையும் வரை மீண்டும், மீண்டும் தொடர் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். ‘எத்தனை தோல்விகள் வந்தாலும் காரணத்தைக் கண்டுபிடித்து வெற்றியடையாமல் விட மாட்டேன்’ என்றமன உறுதி உடையவர்களுக்கு வெற்றி நிச்சயம். இதை டாக்டர் Falu தீவிரத்தன்மை Intentness என்று கூறுவார்.

தோல்விகள் – விழிப்புணர்வை உருவாக்கும்
மனித வாழ்க்கையில் தோல்விகள் என்பவை விழிப்புணர்ச்சி ஊட்ட வந்தவை. நமக்கு எச்சரிக்கை உணர்வை உருவாக்க வந்தவை. அதற்குப் பிறகு ‘விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்ற நிலை வரும்.
நண்பர்களே! அம்மை ஊசி போடும் போது அம்மை நோயை உண்டாக்கும் கிருமிகளைச் சிறிதளவு உடலில் செலுத்துகிறார்கள். அந்தக் கிருமிகள் உள்ளே போனால் நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அதனை எதிர்த்துப் போராடுகின்றன. நோய்க் கிருமிகள் குறைவாக இருப்பதால், வெள்ளை அணுக்கள் அதிகமாக இருப்பதால் நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. அதன் பிறகு வெள்ளையணுக்கள் விழிப்புற்றுத் தயார் நிலையில் இருக்கின்றன. உண்மையான நோய்க் கிருமிகள் வந்தாலும் போரிட்டு வென்று விடுகின்றன.
அம்மை ஊசி போடும்போது வலிதான். வேதனைதான். சிலசமயம் காய்ச்சலும் வந்துவிடுகிறது. ஆனால், அவற்றால் அதன்பிறகு பெரிய நன்மை ஏற்படுகிறது. அதைப்போலவே வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங் களும், தோல்விகளும் வலியை, வேதனையைக் கொடுத்தாலும் பின்னர் விழிப்புணர்ச்சியை ஊட்டி நமக்கு வெற்றி பெறத் துணைபுரிகிறது.
தோல்விக்கு பின் வரும் வெற்றி தரும் நன்மைகள்

இந்த மனித வாழ்க்கைச் சரித்திரத்தில் வெற்றியால் பெற்ற அறிவைவிட, தோல்வியால் பெற்றஅறிவும், விழிப்புணர்வும் அதிகம். எப்படி ஒரு மருத்துவர் உடலில் உள்ள கட்டியை நீக்கி னால், நமக்கு வலி ஏற்படுகிறது. ஆனால், அதன் பலனாக நன்மை கிடைக்கிறது. அதேபோலக் கருணைமிக்க பிரபஞ்ச சக்தி தோல்வியைக் கொடுத்தால் அதனாலும் ஒரு நம்மை கிடைக்கிறது. நாம் மனப்பக்குவம் பெறுகிறோம்.

வெயிலிலிருந்து நிழலுக்குப் போனால் சுகம். இருளிலிருந்து ஒளிக்குப் போனால் சுகம். இப்படித் தோல்வியடைந்து – சங்கடமடைந்து வெற்றிபெற்றால் அதனுடைய சந்தோஷமே தனிதான்.
மனிதர்கள் ஏன் இமயமலையில் ஏறுகிறார் கள்? அதில் எத்தனை சிக்கல்கள், சோதனைகள், சாதாரண வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தடைகளும் இல்லை. ஆனால் இமய மலை ஏறும்பொழுது எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைக் கடந்து மலை உச்சிக்குச் சென்றுவிட்டால், அந்தச் சாதனையே சுகமானது, மகிழ்ச்சியானது. ஆகவே, நண்பர்களே! தோல்விகளைக் கடந்து அந்தச் சாதனைச் சந்தோஷத்தை அடைவோம். அதுவே நமக்குப் பேரானந்தம்.
தோல்வியானால்… அதனால் என்ன? எது நடந்தாலும் இன்று முதல் ஒரு கேள்வியைக் கேளுங்கள். அந்தக் கேள்வி அதனால் என்ன? (So What?)
அதாவது அந்தத் தோல்வியால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நினைத்து அதனால் என்ன? எதுவும் வரட்டும். அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் நான் சந்திப்பேன்’ என்று உறுதியாக நில்லுங்கள். ‘அதைத் தாங்கிக்கொள்ள நான் தயார்’ என்றமன உறுதியுடன் இருப்பவர் களும் எந்தச் சங்கடங்களும், தோல்விகளும், பிரச்சனைகளும் எந்தத் தீங்கினையும் செய்ய முடியாது. அதாவது, “மாற்ற முடிந்தவற்றை மாற்றுவோம். மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வோம்”. “என்னதான் நடக்கும் நடக் கட்டுமே?” என்று எதையும் எதிர்கொள்வோர்க்கு இந்த உலகில் எதுவும் பிரச்சனை இல்லை.
வள்ளுவர்,

‘இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.’

என்று கூறுகிறார்.
அதாவது, ‘இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுடன் அறிவாளிகள், தங்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும் படி செய்துவிடுகிறார்கள்.’

ஜாதகம், சோதிடம், எண் கணிதம்…

அடுத்துத் தோல்வி அடைந்ததற்கு விஞ்ஞானப் பூர்வமான காரணத்தைக் கண்டு பிடிக்காமல் சிலபேர் அனுமானங்கள் கொள்கிறார்கள். இது காரணமாக இருக்குமோ, அது காரணமாக இருக்குமோ? என்றெல்லாம் தவறாக அங்கும், இங்கும் ஓடுகின்றனர். சிலமுறை தோற்றவுடன் மனதில் குழப்பமடைந்து அறிவுப் பூர்வமாகச் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மனம் கலங்கிவிடுகிறார்கள். மீண்டும் வெற்றியடைய ஜாதகம், சோதிடம், நியூமராலஜி, அருள் வாக்கு, கைரேகை, அதிர்ஷ்டக்கல், பில்லி சூன்யம், மாந்தரீகம் என்று பல்வேறு அம்சங்களை நாடுகின்றனர். பலர் ஏமாற்றப்படவும் செய்கின்றனர்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க 999 முறை தோல்வியுற்றார். ‘லேட்டக்ஸ்’ என்ற கெமிக்கலைக் கண்டு பிடிக்க 16999 முறைதோல்வியுற்று 17000வது முறைதான் கண்டுபிடித்தார். அவர் ஒவ்வாரு தோல்வியின் போதும் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து தொடர்ந்ததால் வெற்றியடைய முடிந்தது.

அவர் மட்டும் ஒருசில தோல்விகள் வந்தவுடன் ஜாதகம், சோதிடம் என்று பார்த்திருந்தால், நிலைமை என்ன ஆகியிருக் குமோ தெரியவில்லை.
ஜாதகம், சோதிடம் உண்மையா? பொய்யா? என்று ஆராய்ச்சி செய்ய நாம் வரவில்லை? இவற்றைப் பார்க்கலாமா? வேண்டாமா?
நம் முன்னோர்கள் என்ன சொல்கிறார்கள்? அருணகிரி நாதர் என்ன சொல்கிறார்?

‘நாள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், எனை நாடிவந்த கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும்’ என்கிறார்.
அதாவது, கோள்கள், கிரகங்கள் மற்றதடைகள் என்ன செய்திட முடியும். இறைவனுடைய திருவருள் நமக்குத் துணை செய்யும்பொழுது.
திருநாவுக்கரசர் சொல்கிறார்,

‘நாமார்க்கும் குடியல்லோம்
நமனை யஞ்சோம்’
பாரதியார் சொல்கிறார்,
‘சோதிடம் தனை இகழ்’

விவேகானந்தர் இதைப்பற்றி விளக்க ஒரு கதை சொல்லியிருக்கிறார்,
‘ஒரு ஊரில் ஓர் அரசன் இருந்தான். அந்த அரசனுடைய அரசவையில் ஒருமுறை ஒரு சோதிடர் வந்தார். அவர் சொன்னார் ‘அரசே உங்களுக்கு வாழ்க்கை இன்னும் முப்பது நாட்கள்தான் இருக்கிறது ஜாதகப்படி’ என்று சொல்விட்டார். அதற்கு மன்னன் மிகச் சோர்வாகிவிட்டான். இரண்டு நாட்களாக மிகவும் கவலை. அந்த அரசனால் மதிக்கத்தக்க ஒரு மந்திரி இருந்தார். அவர் அரசரிடம் சென்று ‘ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள்?’ என்றார். அரசர் சொன்னார், சோதிடர் சொன்னதை.
மந்திரி சொன்னார், ‘அரசரே நாளைக்கு அரசவையைக் கூட்டுங்கள். இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்து விடலாம்.
அடுத்தநாள் அரசவை கூட்டப்பட்டது. மந்திரி கேட்கிறார், சோதிடரிடம் ‘சோதிடரே மன்னருக்கு இன்னும் ஆயுள் நாள் எவ்வளவு இருக்கிறது’. ‘இன்னும் 28 நாட்கள்தான்; நான் சொல்லி 2 நாட்கள் ஆகிவிட்டன. மந்திரி கேட்கிறார், ‘சோதிடரே உனக்கு ஆயுள் எவ்வளவு’. அவர் சொல்கிறார், ‘இன்னும் 30 வருடம்’.
மந்திரி உடனே தன்னுடைய வாளை உருவிச் சோதிடர் தலையை வெட்டிவிட்டார். வெட்டிவிட்டு அரசரிடம் சொன்னார், ‘அரசரே 30 ஆண்டுகள் இவருடைய ஆயுள் என்று சொன்னார். ஆனால் 30 நிமிடத்தில் இவருடைய ஆயுள் முடிந்துவிட்டது, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் முழுமையாக வாழுங்கள்! நாம் வெற்றி பெறுவோம்’ என்று கூறுவதாகக் கதை சொல்கிறது…
நண்பர்களே! இதுவரை கூறிய வற்றிலிருந்து நாம் எடுக்கிற முடிவு என்ன வென்றால், அடிப்படையில் பிரபஞ்ச சக்தி, அல்லது கடவுள் மாபெரும் ஆற்றல்மிக்கது. இந்த உலகம், கிரகங்கள் அனைத்தையும் உருவாக்கியது அந்த பிரபஞ்சப் பேராற்றல்.
நாம் அந்த மாபெரும் சக்தியிடம் ஆற்றலிடம் பொறுப்புகளை விட்டுவிட்டு, நம்முடைய கடமைகளை முழு மனத்துடன் ஈடுபாட்டுடன் செய்து கொண்டே போவோம். நல்லதற்கும், கெட்டதற்கும், வெற்றிக்கும், தோல்விக்கும் நாம் பொறுப்புகளை எடுத்துக்கொள்வோம். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

நிச்சயமாகக் கருணைமிக்க அந்தப் பிரபஞ்ச சக்தி எந்த இடையூறும் நமக்குச் செய்யாது; பதிலாகத் துணைபுரியும். தடைகள் வந்தாலும் முயற்சி செய்கின்றமனிதர்களுக்கு அந்தக் கருணைமிக்க பிரபஞ்ச சக்தி, தடைகளை நீக்கிக் கொடுக்கும். வெற்றி பெறத் துணைபுரியும். எனவே, நாம் தொடர்ந்து செயல்புரிவோம். வெற்றி பெறுவோம்.

புதன், 28 செப்டம்பர், 2011

100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2

Supermarket - image: Wikipedia

பாதுகாப்பான ஃபர்னிச்சர்
52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்… நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.
53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.
55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.
56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்… கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.
57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.
58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.
ஏ.சி. வாங்குவோர் கவனிக்கவும்!
59. உங்கள் அறையின் அளவுக்கு ஏற்ப, ஏ.சி. மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறை என்றால், அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுள்ள மெஷினை வாங்காமல், விலை குறைவாக இருக்குமே என்று குறைவான அளவுள்ள மெஷினை வாங்கினால்… அது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விரைவிலேயே மெஷின் கெட்டும் போகும். அதேபோல, சிறிய அறைக்கு, குறிப்பிட்டதைவிட கூடுதல் அளவுள்ள மெஷினை வாங்கினால், அறை விரைவில் குளிர்ந்து, அவஸ்தையைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.
60. அறையில் எத்தனை ஜன்னல்கள் உண்டு, ஃபால்ஸ் சீலிங் உண்டா, அறைக்கு மேல் மொட்டை மாடியா… போன்ற பல விஷயங்களை அலசி உங்கள் ஏ.சி-யின் அளவை முடிவு செய்யுங்கள்.
61 ‘ஃபில்ட்டர்’களை எளிதாகச் சுத்தம் செய்யக் கூடிய ஏ.சி. மெஷின்களை வாங்குங்கள். அதுதான் சொந்தமாக நீங்களே பராமரிக்க வசதியாக இருக்கும்.
62 ‘எனர்ஜி சேவர்’ என்ற பெயரில் வரும் ஏ.சி. மெஷின்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். ‘எனர்ஜி ஸ்டார்’ அதிகம் இருந்தால் அதிக மின்சாரம் மிச்சமாகும்.
63. ஏ.சி. மெஷின் கன்ட்ரோல்கள் எளிதில் இயக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இருளிலும் எத்தனை டிகிரி குளிர் என்பதை டிஜிட்டலில் காட்டும் மெஷின் என்றால் வசதியாக இருக்கம். அதேபோல ‘டைமர்’ உள்ளிட்ட சமாசாரங்களும் இருக்கிற மெஷினென்றால்… அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ரிமோட்டும் இருளிலும் ஒளிரக் கூடிய வகையில் இருப்பது நல்லது.
64. விண்டோ ஏ.சி. மெஷின் அதிகம் சத்தமிடும். சத்தம் தவிர்க்க நினைப்பவர்கள் ஸ்பிலிட் ஏ.சி. வாங்குவதே நல்லது.
65. ஏ.சி. மெஷினுக்கு ‘வருட சர்வீஸ்’ வாங்கி வைப்பது நல்லது. தேவையான இடைவெளியில் சர்வீஸ் செய்வது மெஷினின் ஆயுளை நீட்டிக்கும்.
66. நீளமான வராண்டா போன்ற அறை எனில், அதன் குறுகிய சுவரில் ஏ.சி. மெஷின் மாட்டும் போது, ‘டர்போ ஆப்ஷன்’ உள்ள மெஷினாக இருப்பது நல்லது. அதுதான் காற்றை அறை முழுதும் வீரியத்துடன் செலுத்தும்.
67. ஏ.சி. போன்ற பொருட்களை வாங்கும்போது குளிர் காலத்தில் வாங்குங்கள். குழம்பவேண்டாம்… பெரும்பாலான பொருட்கள் ‘சீஸன்’ முடிந்தபின்பு வாங்குவது, குறைந்த விலைக்கு உத்தரவாதமாக இருக்கும்.
வாஷிங்மெஷின் – வெளுத்துக்கட்டுங்க!
68. வாஷிங் மெஷின் வாங்கும் முன், முக்கியமாக வீட்டில் வாட்டர் சப்ளை எப்படி இருக்கிறது. எத்தனை பேருக்கு மெஷின் பயன்படப் போகிறது என்பதை முடிவு செய்வது நல்லது.
69. எப்போதும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் எனில், ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின் வாங்கலாம். இல்லையேல் செமி ஆட்டோமேடிக் வாங்குவது நல்லது.
70. ‘எனர்ஜி சேவர்’ ஸ்டார் இருக்கும் மெஷின் வாங்கினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
71. முன்பக்கம் வழியாகத் துணிகளைப் போடும் ‘ஃபிரெண்ட் லோடிங்’ மெஷின், அதிக விலைகொண்டதாக இருக்கும். ஆனால், தண்ணீரும் மின்சாரமும் குறைவாகவே தேவைப்படும். அதிகம் சத்தமும் இருக்காது. துணிகளைக் கொஞ்சம் மென்மையாகத் துவைக்கும்!
72. எத்தனை ஆண்டுகளுக்கு ஃப்ரீ சர்வீஸ்; கொள்ளளவு என்ன; எத்தனை கிலோ எடைக்கு துணிகள் என்பதையெல்லாம் பாருங்கள். முழுக்க வாஷிங் மெஷினை மட்டும் நம்பியிருந்தால்… அதிக கொள்ளளவு உள்ள மெஷினை வாங்கலாம்.
‘ஆன்லைன்’ ஷாப்பிங்!
விழாக்காலத் ‘தள்ளுமுள்ளு’களிலிருந்து தப்பித்து ஷாப்பிங் செய்ய எளிய வழி ‘ஆன்லைன் ஷாப்பிங்’. இணையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து உங்களுக்குத் தேவையானவற்றை வீட்டி லிருந்தே ஆர்டர் செய்யலாம். நேரமும் மிச்சம்… அலைச்சலும் மிச்சம்.
73. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். கண்ணில் படுவதெல்லாம் வாங்கிக் குவிக்க மாட்டோம். அதனால் பணமும் மிச்சம். போக்குவரத்து செலவும் மிச்சம்.
74. என்னென்ன வாங்குகிறோம் எனும் பட்டியல் எப்போதும் நமது ‘கிரெடிட் கார்ட்’ ஹிஸ்டரியில் இருக்கும். ‘பணமெல்லாம் எப்படிப் போச்சுனு தெரியலையே!’ என குழம்ப வேண்டியிருக்காது.
75. யாருக்காவது விழாக்கால பரிசு கொடுக்க விரும்பினால், ஆன்லைனில் ஆர்டர் செய்து விலாசத்தைக் கொடுத்தால் போதும். அவர்களுடைய வீட்டுக்கே உங்கள் பெயரில் பொருள் சென்று சேர்ந்து விடும். கொடுப்பவருக்கு ஈஸி, வாங்குபவருக்கு சர்ப்ரைஸ்.
76. இணையத்தில் ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. முக்கியமானது இணைய தளம் நம்பிக்கையானதா, அது செக்யூர்டு சைட்தானா (பாதுகாப்பான தளம்… அதாவது, ‘SSL – Secure Sockets Layer’ என்றால்… பிரவுசரில் கீழ்ப்பாகத்தில் பூட்டு போன்ற படம் வரும்) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
77. இணைய தளத்தில் ‘ரிஜிஸ்டர்’ செய்ய வேண்டி இருந்தால், உங்கள் பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்டாரங்காக இருக்கட்டும். யாரும் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட் முக்கியம். மாமன் பேரு, மச்சான் பேரு, போன் நம்பர், பிறந்த நாள் எல்லாம் உதவாது.
விளையாட்டா எடுத்துக்காதீங்க!
78. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த வயதினருக்கு உரியதையே வாங்குங்கள். ஐந்து வயது குழந்தைக்குரிய பொருள், இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
79. விளையாட்டுப் பொருளில் காந்தப் பொருட்கள் இல்லாமல் இருப்பதைக் கவனித்து வாங்குங்கள். சிறுசிறு காந்தப் பொருட்களை விழுங்கிவிட்டால் பெரும் ஆபத்து. அதோடு, பிளக் பாயின்ட் போன்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் உள்ள இடங்களுக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அதன் மூலம் ஷாக் ஆபத்துக்கும் வாய்ப்பிருக்கிறது.
80. பலூன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சாதுவாக இருக்கும் பலூன், வெடித்துவிட்டால்… மிகவும் ஆபத்தைக் கொண்டு வரும். கண்ணுக்குத் தெரியாத துகள்களாககூட வெடிக்கும் பலூன், வாய் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.
81. ஒரு பொம்மையில், சிறுசிறு பாகங்கள் அதிகம் இருக்கிறதென்றால் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். அந்தப் பொம்மை உடையும்போது, சிறு பாகங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.
82. ‘குறைவான விலைக்குக் கிடைக்கிறதே’ என்று சீன தயாரிப்பு பொம்மைகளை வாங்க வேண்டாம். தரமற்ற பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் அந்தப் பொம்மைகளை கையில் வைத்திருப்பதே ஆபத்துதான். சமயங்களில் குழந்தைகள் அவற்றைக் கடிக்கும்போது ஆபத்து அதிகரிக்கும்.
டெலிவிஷன்… பவர்விஷன்!
83. டி.வி. வாங்கப் போகிறீர்களா… என்ன டி.வி. என்பதை முதலில் முடிவு செய்வதைவிட, அதை எந்த அறையில் வைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அறையின் அளவுக்குத் தக்க டி.வி-யை வாங்குவதுதான் நல்லது. சின்ன அறையில் பெரிய டி.வி-யும், பெரிய அறையில் சின்ன (போர்ட்டபிள்) டி.வி-யும் வைத்தால், பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதோடு உங்களின் கண்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.
84. டி.வி-யைப் பயன்படுத்தி வீடியோ கேம்ஸ் விளையாடும் வசதியும் சமீபகாலமாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எனவே, குழந்தைகளை மனதில் வைத்து, வீடியோ கேம்ஸ் வசதியுள்ள டி.வி-யாக வாங்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
85. டி.வி.டி. பிளேயர், வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர் என நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டே இருப்பதால், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் வகையில் இன்புட், அவுட்புட் வசதியுள்ள டி.வி-யாக இருப்பது நல்லது.
86. நம்பிக்கையான பிராண்ட், அதிக வாரண்டி/கியாரண்டி தரும் நிறுவனத்தின் டி.வி-க்கு முன்னுரிமை தரலாம்.
87. டி.வி-யின் ரிமோட், எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பது நல்லது. ஒருவேளை ரிமோட் வேலை செய்யாமல் போனால், டி.வி. பெட்டியில் உள்ள சுவிட்சுகளைப் பயன்படுத்த நேரிடலாம். எனவே, தேவையான சுவிட்சுகள் டி.வி-யிலும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.
88. நீங்கள் எந்த பிராண்ட் டி.வி-யை வாங்கினாலும், அதற்குரிய சர்வீஸ் சென்டர்கள் உள்ளூரிலேயே இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள்.
உஷார்… உஷார்…
89. ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் ‘பில்’லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.
90. ஒரு பொருளை வாங்கினால், அது சம்பந்தமான கடிதங்கள், ரசீதுகள், கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும்.
91. கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், ‘குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், ‘குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்’ என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.
92. பொருட்களை வாங்கும்போது ‘கியாரண்டி கார்ட்’ பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.
93. வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோ, சர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என ”ஸாரி… ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க” என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.
94. ‘இப்போது புதிய கைப்பிடியுடன்…’, ‘இப்போது புதிய ஸ்பீக்கருடன்…’ இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்… பர்ஸூக்குத்தான் ஆபத்து.
95. ‘பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்கு’ என்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து, விளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்… நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை!
96. ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம், பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டு, மோசமான சேலையை வாங்கிவிடப் போகிறீர்கள்!
97. நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க், தங்க நகைகளுக்கு ஹால்மார்க், பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.
98. தேவைகளைக் குறைப்பது, தேவையற்றவற்றை நிராகரிப்பது, பொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்… நீங்கள் தலைசிறந்த கன்ஸ்யூமர்!
99. ஃபேன்ஸியாக பாட்டில்களிலோ, அழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள், பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.
100. வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ், குளிர்பானம்… அது, இது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.

100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -1



சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங்மால், மல்டிபிளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் என்று திரும்பிய பக்கமெல்லாம் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்ததுமே… ‘ஹையா…’ என்று குடும்பம் குடும்பமாக புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இப்போதெல்லாம் தினம் தினம் தீபாவளி என்றாகிவிட்டது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதுதான் நிலைமை. என்றாலும், ”தீபாவளி சமயத்தில் நடக்கும் பர்ச்சேஸூக்கு தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது. துணிகள் மட்டுமில்லை… செல்போன், கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பலவற்றையும் தீபாவளி சமயத்தில் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் கூட்டம் அதிகம் இருக்கிறது. இதற்குக் காரணம்… போனஸ் உள்ளிட்ட சமாசாரங்கள்தான்” என்கிறார்கள் சென்னை, தி.நகர் பகுதியில் பிரபலமான ஷாப்பிங் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள்.
தீபாவளியோ… நியூ இயரோ… ஷாப்பிங் என்பது சந்தோஷமான சமாசாரம்தான். ஆனால், நம்முடைய தலையில் எப்படி எப்படியெல்லாம் மிளகாய் அரைப்பது என்பதில்தான் பலரும் குறியாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்துவிடாமல் ஷாப்பிங் செய்வதுதான் புத்திசாலித்தனம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது ’100/100 சூப்பர் டிப்ஸ்’.

செல்போன் வாங்கப் போறீங்களா?
1. மொபைலை மாற்றும்போது ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. நல்ல கடைகளாகப் பார்த்து மொபைலை மாற்றுங்கள். உங்களின் பழைய மொபைலுக்கு அவர்கள் சொல்லும் விலைக்கு உடனே தலையாட்டிவிடாதீர்கள். கூச்சப்படாமல் பேரம் பேசினால், உங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பது நிச்சயம்.
2. பேட்டரியின் லைஃப் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கவனமாகப் பாருங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல் இருந்தால், நம்முடைய நேரத்தை சாப்பிடுவதோடு பணியையும் பாதிக்கும். அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால்… உடனே பேட்டரியை மாற்ற வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அது மொபைல் போனின் தொழில்நுட்பக் கோளாறாகவும் இருக்கலாம். முறைப்படி செக் செய்து கொள்ளுங்கள்.
3. மொபைல் வாங்கியதுமே…. சிம் கார்டு போட்டுப் பேசிப் பாருங்கள். தெளிவாக, சத்தமாகக் குரல் கேட்பது ரொம்ப முக்கியம். என்னதான் எக்ஸ்ட்ரா சமாசாரங்கள் இருந்தாலும்… பேசுவதற்கும் கேட்பதற்கும்தான் மொபைல் போன் என்பதை மறந்து விடாதீர்கள்.
4. மொபைல் போன் வாங்க நினைப்பவர்கள், நேரில் போய் வாங்குவதே மிக மிக நல்லது. பட்டன்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பது முக்கியம். ‘ஆகா… வீடியோ இருக்கிறது, ஆடியோ இருக்கிறது, போட்டோ எடுக்கலாம்’ என இத்யாதி இத்யாதிகளில் கவனம் செலுத்தி, முக்கியமான சமாசாரங்களை கோட்டை விட்டுவிடாதீர்கள்.
5. மொபைல் போன் வாங்கும் முன் அதைப் பற்றிய தகவல்களை நண்பர்களிடமோ, இணைய தளத்திலோ சில நாட்கள் அலசுங்கள். பிறகு, ‘இதுதான் எனக்குத் தேவையான போன்’ என முடிவெடுங்கள். தீர்மானம் செய்துவிட்ட பிறகு, கடைக்குச் செல்லுங்கள்.
6. காஸ்ட்லி போன் எனில் மொபைல் போனுக்கான இன்ஷுரன்ஸ் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். மொபைல் போன் கோளாறு, தீ, திருட்டு என்று எந்த விஷயங்களுக்கெல்லாம் இன்ஷுரன்ஸ் கவரேஜ் இருக்கிறது என்பதை விசாரித்த பிறகு பாலிஸி எடுப்பது நல்லது!
7. நீங்கள் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்துபவரா..? அப்படியென்றால், ‘அம்பாஸடர் மாதிரி’ என்பார்களே… அதுமாதிரி தரமான, எல்லா சூழலையும் தாக்குப் பிடிக்கற மாடல் போன்களைத் தேர்ந்தெடுங்கள். அதாவது ‘பேஸிக் மாடல்’ என்றுகூட சொல்லலாம். ‘டச் ஸ்க்ரீன்’ போன்ற ‘ஃபேன்ஸி’ மற்றும் அதிக சென்ஸிடிவ்வான தொழில்நுட்பங்கள் இல்லாத மாடலாக இருப்பது பயன் தரும். அத்தகைய போன்கள் நீண்ட நாள் உழைக்கவும் செய்யும்.
8. ‘இரண்டு சிம்’, ‘குறைந்த விலை’ என்று சீனா போன்ற வெளிநாட்டு போன்களை வாங்கி விடாதீர்கள். அந்த போன்களில் உள்ள ஆன்டெனா மூலம் ரேடியேஷன்கள் அதிகமாக ரிஸீவாகும். இது, உடலுக்கு ஊறு விளைவிக்கும்.
சிம் கார்டு ஜாக்கிரதை!
9. செல்போன் வைத்திருக்கிறீர்களா… சிம் கார்டு வாங்கும்போது, எந்த நிறுவனத்தின் (சர்வீஸ் புரவைடர்) சேவை, உங்களுக்குத் தேவை என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். வழக்கமாக எந்தெந்த ஊர்களுக்குச் செல்வீர்களோ… அங்கெல்லாம் கவரேஜ் இருக்கும் சர்வீஸ் புரவைடராக இருப்பதுதான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
10. மொபைல் சர்வீஸ் வாங்கும்போது எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட், கால் சார்ஜ், மாதக் கட்டணம் என அனைத்தையும் கவனியுங்கள். பலர் நாசூக்காக மறைமுகக் கட்டணங்களை வைத்திருப்பார்கள்.
11. கால் சார்ஜ் விஷயத்தில் அதிக கவனம் தேவை. ‘நாங்கள், நிமிடத்தில் வசூலிக்கிறோம்…’, ‘நாங்கள் விநாடிகளில்தான் வசூலிக்கிறோம்…’ என்றெல்லாம் வகை வகையாக வலை விரிப்பார்கள். வார்த்தைகளில் மயங்கினால் பாக்கெட் பணால்! சர்வீஸ் புரவைடர்களிடம் பேசி, அவர்களின் கால் கட்டணங்களைத் (டேரீஃப்) தெரிந்து கொண்டு, அலசி ஆராய்ந்து எது நமக்கு லாபகரமானது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
12. போனில் இன்டர்நெட் இருக்கிறது, வீடியோ சேட்டிங் இருக்கிறது என்பதற்காக சதா அவற்றையே சுழற்றிக் கொண்டிருந்தால்… சத்தம் இல்லாமல் பைசா கரைய ஆரம்பித்துவிடும். ‘அதெல்லாம் நமக்குத் தேவையா’ என்று தெரிந்து, அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
13. ஹலோ ட்யூன்/காலர் ட்யூன் எனப்படும் வசதியை ஏற்படுத்தும் முன்பாக அதனால் என்ன பயன் என்பதை முதலில் உணரவேண்டியது அவசியம். அந்த ட்யூன் உங்களுக்குப் பிடித்த பாடலாக இருக்கலாம். ஆனால், எதிர் முனையில் பேசுபவர்தான் அதைக் கேட்கப்போகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தப் பாடல் சிலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துவிட்டால்… உங்கள் மீதான அபிப்பிராயத்தில் பேதங்கள் வரலாம்.
ஆடைகளில் அலட்சியம் வேண்டாம்!
14. விழாக் காலம் என்றால்… கடைசிக் கட்டத்தில் ஆடைகள் வாங்கச் செல்லாதீர்கள். கூட்டம் அதிகமாக மொய்க்க ஆரம்பித்து, நின்று நிதானித்து தேர்வு செய்ய வசதியில்லாமல் செய்துவிடும். அதோடு, நல்ல துணிகளெல்லாம் விற்றும் தீர்ந்திருக்கும். அதேபோல மிகவும் ஆரம்பக் கட்டத்திலும் செல்லக் கூடாது. பழைய ஸ்டாக்குகளைத் தலையில் கட்டிவிடுவார்கள்.
15. ‘என்ன வாங்க வேண்டும்?’ என்று பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் நல்லது. ரெடிமேடு ஆடைகளென்றால் உடுத்திப் பாருங்கள்; எல்லா பட்டன்களையும் போட்டுப் பாருங்கள்; ஜிப்கள் சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பாருங்கள்; முக்கியமாக ஆடையை அணிந்து கொண்டு நடக்க முடிகிறதா, அமர முடிகிறதா, எழ முடிகிறதா என்பதையும் கவனியுங்கள். உதாரணத்துக்கு, இடுப்பு மிகவும் ¬ட்டான ஆடை என்றால்… அது அந்தப் பாகத்தில் புதுவித பிரச்னையை உண்டாக்கும்.
16. எளிதில் கழற்ற வசதியான ஆடைகளை அணிந்து கொண்டு ஷாப்பிங் செல்லுங்கள். உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்க இது வசதியாக இருக்கும். இறுக்கமான ஆடைகள், ஷு போன்றவற்றைத் தவிருங்கள். போட்டுப் பார்க்கத் தடை செய்யும் கடைகளைத் தவிர்ப்பதே நல்லது.
17. ஆடைகளை நீங்களே தேடித் தேடி வாங்குவதை விட, உங்களுக்குத் தேவையான ஆடையை சேல்ஸ்மேனிடம் கேட்டு வாங்குவது ரொம்பவே நேரத்தை மிச்சப்படுத்தும். உங்கள் கவனத்தையும் அதிகமாக சிதைக்காது.
18. தனியே போய் ஷாப்பிங் செய்வதே நல்லது. நான்கைந்து தோழிகளுடன் போனால்… உங்களால் எதையும் நிம்மதியாக வாங்க முடியாது. யாராவதுகூட வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தால்… கணவருடன் செல்வதுதான் பயனுள்ளதாக இருக்கும் – குழந்தையை வைத்துக் கொள்வதில் ஆரம்பித்து பல விஷயங்களுக்கும்!
19. எவ்வளவு பட்ஜெட் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த பட்ஜெட்டுக்குரிய பொருள் கிடைக்கும் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள். கடைகளிலும் அதற்குரிய இடங்களைத் துழாவுங்கள்.
20 ஆடைகள் வாங்கும்போது… தண்ணீரில் அடிக்கடி நனைக்கக் கூடியதா, டிரை கிளீனிங் தேவைப்படுமா என்பதையெல்லாம் நன்றாகக் கேட்டுத் தெரிந்து வாங்குங்கள்.
21. நீங்கள் வாங்கிவந்த துணி சாயம் போகிறதா..? ‘சரி நம்ம தலையெழுத்து’ என்று விட்டுவிடாதீர்கள். வாங்கிய கடைக்கே திரும்ப எடுத்துச் சென்று புதிய துணியைக் கேட்டு வாங்குங்கள். அவர்களும் சத்தமில்லாமல் மாற்றித் தருவார்கள். அடுத்த தடவை சாயம் போனாலும், அதேபோல மாற்றிக் கேட்கத் தயங்காதீர்கள்.
உள்ளபடியே தள்ளுபடியா?
22. கடையில் நுழைந்தவுடன் முதலில் உங்கள் கண்களில் தெரிவது ‘தள்ளுபடி’ வாசகங்கள். அவசரப்பட்டு உங்கள் பணத்தை அங்கே கொட்டாதீர்கள். எதை முக்கியமாக வாங்க வேண்டுமோ… அதை முதலில் வாங்குங்கள். மீதமிருக்கும் பணத்துக்கு ஏற்ப ‘தள்ளுபடி’ பக்கம் கவனத்தைத் திருப்புங்கள்.
23. ‘ஒரு துணி வாங்கும் பணத்தில், இரண்டு துணிகள்… மூன்று துணிகள்… நான்கு துணிகள்’ என்று ஆசை காட்டினால் மயங்கி விழாதீர்கள். தேவைக்கேற்றதை மட்டும் வாங்குங்கள். தரமான பொருள், நீண்ட நாட்கள் மெருகுடன் இருக்கும்.
24. ‘தள்ளுபடியில் வாங்கிய ஆடைகளை மாற்றித் தர இயலாது’ என்றொரு வாசகத்தைக் கவனித்திருப்பீர்கள். அது, தரமற்ற பொருட்களை உங்களிடம் தள்ளி விடும் தந்திரமாகவும் இருக்கலாம். துணிகள் லேசாகக் கிழிந்திருந்தால்கூட, அதை மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி ஒரு பொருளை வாங்க வேண்டுமா… என்றும் முடிவு செய்யுங்கள்.
25. ‘அசத்தலான 50% தள்ளுபடி’ என்றவுடன் உற்சாகமாகி, ‘பாவம், கடைக்காரர் நஷ்டத்தில் விற்கிறார்’ என நினைத்து எல்லாவற்றையும் அள்ளி விடாதீர்கள். விற்பனை விலை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அடக்க விலை, சேர்க்கப்பட்ட விலை போன்ற இத்யாதி விலைகளெல்லாம் கடைக்காரருக்கே வெளிச்சம்.
புன்னகைக்கும் பொன் நகை!
இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் (Bureau of Indian Standards), 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளுக்கு வழங்கும் முத்திரைதான் ’916 ஹால்மார்க்’. ஒரு கிராம் நகையில் 91.6% தூய தங்கம் இருக்கிறது என்பதைத்தான் குறிக்கிறது அந்த 916. தூய தங்கத்தின் அளவைப் பொறுத்து இந்த எண்கள் மாறுபடும் (9 கேரட்- 375; 14 கேரட்- 585; 17 கேரட்- 708; 18 கேரட்- 750; 21 கேரட்- 875; கேரட்- 23 கேரட்- 958). இதையெல்லாம் கவனித்து நகைகளை வாங்குவது நல்லது.
26. நீங்கள் வாங்கும் நகை, ‘ஹால்மார்க்’ முத்திரையுடன் இல்லையென்றால்… ‘ஹால்மார்க்’ முத்திரையைப் போட்டு தரச்சொல்லி வாங்கலாம். ஆனால், நகைகளை அதற்குரிய விற்பனை ரசீதுகளுடன் வாங்குவது முக்கியம்.
27. வாங்கும் நகையின் தரம் எதுவென்று முத்திரைக்கு உள்ளே இருக்கும் தர எண்ணை, லென்ஸ் மூலம் தெளிவாகப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
28. பெண் குழந்தை என்றால், எதிர்காலத்துக்குத் தேவை என்று நகைகளாக வாங்கிச் சேமிப்பீர்கள். அதைவிட, தங்க நாணயங்களாகச் சேமித்தால்… எதிர்காலத்தில், அன்றைய நாகரிகத்துக்கு ஏற்றாற்போல புதிய நகைகளைச் செய்து கொள்ளலாம்.
29. தங்க நகை விலை உயர்ந்து கொண்டே போகும் இந்தக் கால கட்டத்தில், உங்களின் முதலீடு, தங்க நகைகளாக இருக்கட்டும். அதுவும் ’916 ஹால்மார்க்’ நகைகளாக இருப்பது மிகவும் புத்திசாலித்தனமானது.
30. தங்க நகை வாங்கும்போது, தரமானதா என்பதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும். ‘பவுனுக்கு இத்தனை ரூபாய் தள்ளுபடி’ என்பதையெல்லாம் பார்த்து, தரமற்ற தங்க நகைகளை வாங்கிவிடாதீர்கள். விற்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
31. கல் வைத்த நகைகள் வாங்கும்போது, அந்தக் கற்களின் தரம் பற்றி நன்றாகக் கேட்டறியுங்கள். அவை தங்கத்தின் எடையுடன் சேருமா, சேராதா என்பதையும் கவனிப்பது முக்கியம். விலை குறைந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் நகையை, தங்கத்துக்குரிய விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனமல்ல.
சூப்பர் மார்க்கெட் போவோமா?!
32. தேவையில்லாமல் பணம் செலவாகும் ஒரு இடம்… சூப்பர் மார்க்கெட். என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டுப் பொருட்களை வாங்க வேண்டும். இல்லையென்றால், தேவையில்லாமல் வாங்கிக் குவிப்பீர்கள். அவையெல்லாம் வீட்டு அலமாரியிலும் ஃப்ரிட்ஜிலும் தூங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பொருள் கெட்டுப்போக ஆரம்பித்தால், உங்களின் நோக்கமே வீணாகிவிடும்.
33. ‘பிராண்ட்’ பார்த்து மயங்கிவிடாதீர்கள். அதே தரத்தில், உள்நாட்டுப் பொருட்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கக் கூடும். அதைக் கவனித்து வாங்குங்கள்.
34. அடிக்கடி பயன்படுத்த வேண்டிய பொருட்களை கவனித்து வாங்குங்கள். விற்பவர்களின் வசீகர வார்த்தையில் மயங்கி வாங்கிக் குவிக்கும் வெஜிடபிள் கட்டர், சப்பாத்தி மேக்கர் எல்லாம் பெரும்பாலும் பயன்படுவதில்லை.
35. பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு நல்லவையல்ல. முடிந்தவரை அவற்றைத் தவிர்க்கப் பாருங்கள். அல்லது குறைவாகவே வாங்குங்கள்.
36. ஒரு கடைக்குச் செல்லும்போது, அந்தக் கடையின் சொந்தத் தயாரிப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றை வாங்கி பயன்படுத்திப் பார்க்கலாம். நன்றாக இருந்தால், தொடரலாம். அந்தப் பொருட்கள் பெரும்பாலும் விலை குறைவாக இருக்கும் என்பதைக் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.
கம்ப்யூட்டர் வாங்க கவனம் தேவை!
37. கம்ப்யூட்டர் கொஞ்சம் கவனமாக வாங்க வேண்டிய விஷயம். ஒரே மாதிரி செயல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்களை பார்த்தபின் முடிவெடுக்க வேண்டும். எல்லா அப்டேஷன் சமாசாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மலிவு விலையில் ‘ரேம்’ போன்றவை கிடைத்தால், அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
38. நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முதல் அயிட்டம், ரேம். அதிக திறன் கொண்ட ரேம், உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டை அதிகரிக்கும். கூடவே, ஆபரேடிங் சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் சக்திக்குத் தக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.
39. உங்கள் தேவையை அந்த கம்ப்யூட்டர் பூர்த்தி செய்யாது எனத் தெரிந்தால்… அதை வாங்காதீர்கள். ஒரு கம்ப்யூட்டரை வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டால்… கொஞ்ச நேரம் அதைத் தனியாகச் சோதித்துப் பாருங்கள். சேல்ஸ்மேன் அருகில் இருக்கும்போது சிலவற்றை சரியாகச் சோதிக்க முடியாமல் போகலாம்.
40. கம்ப்யூட்டருடன் என்னென்ன இணை பொருட்கள் கிடைக்கின்றன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் அனைத்தும் இல்லாவிட்டால், தைரியமாகக் கேட்டு வாங்குங்கள்.
41. கம்ப்யூட்டரின் வாரண்டி, கியாரண்டி, ரிட்டர்ன் போன்றவவை ரொம்ப முக்கியம். குறிப்பாக முக்கியமான பாகங்கள் பழுதானால் மாற்றித் தரும் கியாரண்டி அவசியம். அந்தக் கம்ப்யூட்டருக்கான சர்வீஸ் சென்டர்கள் உங்களுக்கு அருகில் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். எந்தெந்த நிறுவனங்கள், சிறப்பான சேவை தருகின்றன என்பதையும் விசாரித்து அறியுங்கள்.
42. இரண்டு பிராண்ட் கம்ப்யூட்டர்கள் ஒரேபோல இருந்தும், பயங்கர விலை வித்தியாசம் இருந்தால் நன்றாகக் கவனித்து வாங்கவும். புராஸசர், மெமரி, பிராண்ட் போன்றவை விலை வித்தியாசத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவையெல்லாம் திருப்தியாக இருக்கும்பட்சத்தில், விலை அதிகம் என்றாலும்கூட வாங்கலாம்.
43. பத்திரிகை விமர்சனங்கள், தயாரிப்பாளர் விமர்சனங்கள், பயன்பாட்டாளர் விமர்சனங்கள் மூன்றும் வேறு வேறு விதங்களில் கம்ப்யூட்டரை அலசும். எனவே, ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் இந்த மூன்று விதமான விமர்சனங்களையும் படித்துவிட்டு முடிவெடுங்கள்.
டிஜிட்டல் கேமரா டிஷ்யூம்!
44. கேமரா வாங்குவது ஒரு கலை. கேமரா வாங்கும் முன் பல விஷயங்களில் நீங்கள் தெளிவு கொள்ளவேண்டும். முக்கியமாக புகைப்படம் எடுப்பது உங்களுக்கு கலையா, வேலையா, பொழுதுபோக்கா, வீட்டு உபயோகத்துக்கா என்பதில் தெளிவு வேண்டும். சாதாரணத் தேவைக்கு எனில் ‘ஆட்டோமேடிக்’ கேமராவே போதும்.
45. டிஜிட்டல் கேமரா என்றதும், ‘எத்தனை மெகா பிக்ஸல்?’ என்பதுதான் எல்லோரும் முதலில் கேட்கும் கேள்வி. ஆனால், அது அவ்வளவு முக்கியமில்லை. நீங்கள் படங்களை ‘சாதாரண’ அளவில் பிரின்ட் போடப் போகிறீர்களெனில் 5 மெகா பிக்ஸல் கேமராக்களே கனகச்சிதம். மிகப் பெரிய ‘புளோ-அப் சைஸ்’ படங்களாக பிரின்ட் செய்ய வேண்டுமெனில் அதிக மெகா பிக்ஸல் கேமராக்கள் வாங்கலாம்.
46. பேட்டரி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அதிகம் ‘இண்டோர்’ போட்டோக்கள் எடுக்கும் கேமராவில் ஃப்ளாஷ் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு அதிக பேட்டரிகள் இருப்பது நல்லது. சார்ஜ் செய்து பயன்படுத்தக் கூடிய பேட்டரிகள் வாங்குவது அவசியம்.
47. கேமராவுடன் எல்லா உபபொருட்களும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு கேமரா வாங்க முடிவு செய்தபின் அதன் விலை எங்கே குறைவாக இருக்கிறது, எங்கே இலவசமாக கவர், பேட்டரி, மெமரிகார்டு போன்றவை தருகிறார்கள் என்று பார்த்து வாங்குங்கள்.
48. சாதாரண தேவைகளுக்கு ‘எஸ்.எல்.ஆர்.’ ரக கேமரா வகைகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் பயன்படுத்தக் கூடிய ‘பாயின்ட் அண்ட் ஷுட்’ கேமராக்களே அன்றாடத் தேவைகளுக்கு இலகுவானது.
49. கேமராவின் ‘ஸும்’ (zoom) வசதியைப் பார்க்கும்போது ‘ஆப்டிகல் ஸும்’ அதிகம் உள்ளதைப் பார்த்து வாங்க வேண்டும். டிஜிட்டல் ஸும் அதிகம் பயன் தராது.
50. அளவில் சிறியதாக… ஸ்டைலிஷாக இருக்கவேண்டும் என்று கணக்குப் போட்டு கேமரா வாங்காதீர்கள். கையில் பிடித்து எடுப்பதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதை முக்கியமாக வைத்து வாங்குங்கள். அத்தகைய கேமராக்கள்தான் குடும்பத்திலுள்ள அனைவரும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.
51. ‘இமேஜ் ஸ்டெபிலைஸேஷன்’ எனப்படும் வசதியுள்ள கேமராவா என்று பார்த்து வாங்குங்கள். அது இருந்தால்… போட்டோ எடுக்கும்போது கேமரா கொஞ்சம் அசைந்துவிட்டாலும், படம் தெளிவாக வரும்.
பாதுகாப்பான ஃபர்னிச்சர்!
52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்… நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.
53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.
55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.
56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்… கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.
57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.
58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மாதவிலக்கு: புதிய ஆய்வுகள்



மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை `பி.எம்.எஸ்' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும்.

இந்த `பி.எம்.எஸ்.' பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்த மருத்துவ விஞ்ஞானிகள், அதில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதற்கு `பி.எம்.டி.டி' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் டிஸ்மோர்பிக் டிசார்டர்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஆபத்தும் கலந்தது.

இந்த பாதிப்பு ஏற்படும் பெண்கள், வெளிநாடுகளில் கணவரை அடித்து உதைத்து விடுகிறார்கள். இங்குள்ள பெண்கள் கணவரோடு அதிகபட்ச வாக்குவாதத்தில் ஈடுபடுவது, குழந்தைகளுக்கு சூடு போடுவது, பக்கத்து வீட்டினரோடு சண்டை போடுவது போன்றவைகளில் ஈடுபடலாம். இதன் தொடர்ச்சியான பாதிப்புகள் சமூகத்திலும் எதிரொலிக்கும். இதில் அதிகபட்ச கொடூரம் என்னவென்றால், இந்த பி.எம்.டி.டி. பாதிப்பின் காலகட்டத்தில் தான் பெண்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள், வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. கூடுதலாக மனஅழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல், அதிகமான சோர்வு போன்றவைகளும் இருந்தால் அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு கொண்டு சென்று விடுகிறது. அப்போது கணவரோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மையும், எரிச்சலும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள்.


தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்


- கோபம் தொடர்ந்து நீடித்தல்.

- வேலையிலும், மற்றவர்களோடு பழகுவதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது.

- சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் விவாதங்களாக்கி விடுதல்.
- காரணமில்லாமல் அழுதல். - தன்னால் எதுவுமே முடியாது என்று தன்னம்பிக்கை குறைதல்.

- மற்றவர்களை தன்பக்கம் ஈர்க்கத் தெரியாமல் தடுமாறுதல். - கடுமையான சோர்வு.

- உறக்கம் இல்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.

- பசியில்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.

- கட்டுப்பாடற்ற சில செயல்பாடுகள் போன்றவை பி.எம்.டி.டி.யின் இதர அறிகுறிகள்.

சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்களுக்கு ஏற்கனவே மனஅழுத்த நோய் இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம். பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பி.எம்.எஸ். பிரச்சினை இருந்தால் அவர்களில் 4 சதவீதம் பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து பி.எம்.டி.டி.யாக மாறும். ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் `சிரோட்டோத்தின்' அளவு குறையும்.

இந்த குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு. பி.எம்.டி.டி. பாதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் என்னென்ன? ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றதன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும்.

சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம். பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. அதுபோல் ஆண்களும், சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.

-டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

சனி, 24 செப்டம்பர், 2011

அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்

 


வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், “டிவி’ பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது. சென்னை, மும்பை, டில்லி, பாட்னா, சண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 2,000 பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டு தனத்துடனும், அதிக உடல் பருமனுடனும் இருப்பர். அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.

ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக “டிவி’ பார்ப்பது தான் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதுகாப்பானது. பெரும்பாலான பெற்றோர், தங்களது குழந்தைகள், “டிவி’யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, சத்துக் குறைவான உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

“டிவி’ நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும், நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். 12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள், தங்களது பெற்றோருடன் அமர்ந்து, “டிவி’ பார்ப்பதையே விரும்புகின்றனர்.

“ரியாலிட்டி ÷ஷா’க்களை 76 சதவீத பேர் விரும்புகின்றனர். பெரும்பாலான, “டிவி’ நிகழ்ச்சிகளில் வன்முறை, ஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, “டிவி’ நிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உணவு

ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படும். இதனால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். சிலர் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்று கவலைப்படுவார்கள். முதலில் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

பொதுவாக குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் போதோ, கோபத்தில் இருக்கும் போதோ அவர்களுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களாகிய நாமே கோபத்தில் உள்ளபோது உண்ண மாட்டோம். குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

குழந்தை சாப்பிடவில்லையென்றால் உடனே குழந்தையை சில தாய்மார்கள் மிரட்டுவார்கள். சிலர் பயம் காட்டுவார்கள், சிலர் அடித்து சாப்பாடு ஊட்டுவார்கள்.

குழந்தைகளை மிரட்டும்போது அவர்கள் மன நெருக்கடியும், டென்சனையும் அனுபவிக்க நேரிடும். இதனால் குழந்தைகள் உணவை அறவே வெறுப்பார்கள். அந்த நேரத்தில் எந்த உணவை வாயில் வைத்தாலும் துப்பி விடுவார்கள்.
அதுபோல் குழந்தை களுக்கு அவசர அவசரமாக உணவு ஊட்டக்கூடாது. தாயின் அவசரத்திற்கு தகுந்தபடி குழந்தையால் மின்னல் வேகத்தில் சாப்பிட முடியாது. சிறிதளவு உணவு கொடுத்தாலும், பொறுமை யாகவும், நிதானமாகவும் ஊட்ட வேண்டும்.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பாட்டி புராணக்கதைகள், இதிகாச கதைகள் கூறுவார்கள். குழந்தைகளும், ஓடி, ஆடி விளையாடி உணவருந்தும். ஆனால் இன்று பாட்டியும் இல்லை, கதை சொல்ல யாரும் இல்லை. தொலைக்காட்சியும், சி.டியும் தான் பாட்டியாக உள்ளது.
பொருள் தேடுவது அவசியம்தான். ஆனால் குழந்தை வளர்ப்பு அதைவிட அவசியம். குழந்தைகளை இயந்திரமாக நினைக்காமல் அவர்களை ஜீவன்களாக நினைத்து உணவு முதல் எல்லாவற்றிலும் அக்கறை எடுத்துக்கொண்டால் தான் எதிர்கால குழந்தை ஆரோக்கிய மானதாகவும், அற்புத குணம் கொண்டதாகவும் வளரும்.

ஒரு வயது ஆரம்பம் முதல் ஒருநாளைக்கு 4 முதல் 5 முறை வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

1 வயது முதல் குழந்தைகளுக்கு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் அதன் சுவையை அறியாமல் குழந்தை சாப்பிடாமல் துப்பும் அல்லது வாந்தி எடுக்கும். இதனால் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்று எண்ணி பழக்கப்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது. பொறுமையோடு மீண்டும் மீண்டும் கொடுத்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் அதன் சுவை குழந்தைக்கு பிடித்து விருப்பத்தோடு சாப்பிட ஆரம்பிக்கும்.

உணவை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். இந்த திடமான உணவுகள் குழந்தைக்கு செரிமானம் ஆக 3 மணி நேரமாவது ஆகும். எனவே அடிக்கடி உணவைத் திணிக்கக் கூடாது.

ஆவியில் வேகவைத்த மாவு உணவுகள், அதாவது இட்லி, இடியாப்பம், வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, நன்கு வேகவைத்த முட்டை, ஆவியில் வேகவைத்த நேந்திரம் பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
மிளகு கலந்து குழைய வேகவைக்கப்பட்ட வெண்பொங்கல், குழைத்த சாதத்துடன், மோர், இரசம், பருப்பு, கடைந்த கீரை இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து கொடுக்க வேண்டும்.

வேகவைத்து மசித்த காய்கறிகள், வேகவைத்த காரட், வேகவைத்த ஆப்பிள் போன்றவற்றை கொடுக்கலாம்.

இரவில் காய்ச்சிய பால் கொடுக்க வேண்டும்.



ஒன்றரை வயதுக்கு மேல் நன்கு வேகவைத்த ஆட்டிறைச்சி, ஈரல், மீன் போன்ற மாமிச உணவுகளை சிறிதளவு கொடுக்கலாம்.

சப்பாத்தி, ரொட்டி, பிரட் போன்றவற்றை குறைந்த அளவு கொடுக்கலாம்.
குழந்தைக்கு பல் முளைத்து மென்று சாப்பிடும் அளவு வந்தவுடன் வேகவைத்த பருப்புகள், தானிய வகைகளைக் கொடுக்க வேண்டும். காரட், காலிபிளவர், பசலை கீரை, வேகவைத்த முட்டை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
பழத்துண்டுகள் தோல் நீக்கி கொடுக்க வேண்டும். பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றையும் கொடுக்கலாம்.

நன்றி-ஹெல்த் சாய்ஸ்